தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று முதல் நெகிழிக்கு தடை

webteam

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களுக்கான தடை தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழி தாள், நெகிழிகளால் ஆன தெர்மாகோல் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகிதக் குவளைகள், நெகிழி குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், நெகிழி பொட்டலங்கள், நெகிழி தூக்கு பைகள், நெகிழி கொடிகள், நெகிழி விரிப்புகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழி தேநீர் குவளைகள், நெகிழி உறிஞ்சு குழல்கள், நெகிழி பூசப்பட்ட பைகள், நெய்யாத நெகிழி பைகள் போன்ற 14 வகையான நெகிழி பொருள்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக மாறாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகிதச் சுருள், தாமரை இலை ஆகியவற்றை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்ணாடி, உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில், மரப்பொருள்கள், காகித குழல்கள், துணி, காகிதம், சணல் பைகள், காகித மற்றும் துணிக் கொடிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும்  நெகிழிப் பொருட்கள் மீதான தடையை மீறுவோர் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.