தமிழ்நாடு

மதுரை: டி.எம்.சௌந்தரராஜனின் சகோதரருக்கு இப்படி ஒரு நிலைமையா?

webteam

இசை உலகில் கொடிகட்டிப் பறந்த டி .எம்.சௌந்தரராஜனின்  தம்பி டி.எம்.கிருஷ்ணமூர்த்தி உதவிக்கு ஆளின்றி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆதரவின்றி கிடந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இசை உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்தி இன்றுவரை தனக்கான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் டி.எம் சௌந்தரராஜன். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே 1944-ல் இவரது சகோதரரான டி.எம்.கிருஷ்ணமூர்த்தி உடன் இசை கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். டி.எம்.எஸ்.,யை விட நான்கு வயது இளையவரான டி.எம்கிருஷ்ணமூர்த்தி மிருதங்க வித்துவானாக ஜொலித்தவர். குறிப்பாக அவரது சகோதரர் டி.எம்.எஸ்.,க்கு இசை ரீதியாக உதவிகள் செய்தவர். அவரது இசை சேவையை பாராட்டி கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

தற்போது 94 வயதான டி.எம்.கிருஷ்ணமூர்த்தி , 91 வயதான தனது மனைவியுடன் யா.ஒத்தக்கடை அருகே நரசிங்கம் பகுதியில் வசித்து வருகிறார். கலைமாமணி விருது பெற்றதற்காக தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் 2500 ரூபாயை நம்பியே இருவரும் குடும்பம் நடத்தி வருகின்றனர். அதற்கான ஓய்வூதிய புதுப்பிப்பு இந்த மாதத்துடன் நிறைவு பெறுவதால் அதை புதுப்பிப்பதற்காக ஒத்தக்கடை பகுதியிலிருந்து அரசு பேருந்து மூலம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளார்.

அப்போது முதுமை காரணமாக நிற்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சாலையில் மயங்கி விழுந்துள்ளார். தூக்க ஆளின்றி நீண்ட நேரம் கூச்சலிட்டுக் கொண்டு இருந்த அவரை அங்கிருந்தவர்கள் கொரோனா அச்சத்தால் தூக்கிவிட முன்வரவில்லை. ஆளின்றி அரை மணி நேரத்துக்கும் மேலாக பலரையும் உதவிக்கு அழைத்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சிலர் தூக்கி விசாரித்தபோது அவர் யார் என்பதையும் எதற்காக வந்தார் என்ற காரணத்தையும் கூறியுள்ளார். இதையடுத்து ஓய்வூதியம் புதுப்பிக்கும் பணி அடுத்த மாதம் நடைபெறுவதால் சென்று வருமாறு மாவட்ட கருவூல பணியாளர்கள் அவரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு இருந்த தன்னார்வலர் ஒருவர் ஆட்டோ மூலம் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்க பண உதவி செய்து அனுப்பி வைத்தார்.