தமிழ்நாடு

எஸ்.வி.சேகர் வீடு தாக்கப்பட்ட விவகாரம்: வழக்கு தள்ளுபடி

webteam

நடிகர் எஸ்.வி.சேகர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தை, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான பதிவை, நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் மறுபதிவு செய்திருந்தார்.  இதனால் அவரது வீட்டின் முன் திரண்டு போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள், கல்வீசியும் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக காவல்துறை உரிய விசாரணை நடத்தாததால், அந்த வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டுமென வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், எம்.தண்டபானி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

கல்வீச்சு சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட பத்திரிகையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தை நாடாதபோது, நீங்கள் ஏன் வழக்கு தொடர்ந்தீர்கள் என வழக்கறிஞர் பிரேம் ஆனந்திடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். நீதிமன்றத்தை நாட முடியாதவர்களுக்காகத்தான் பொதுநல வழக்கு தொடர முடியும் என தெரிவித்த நீதிபதிகள், பிரேம் ஆனந்த் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.