தமிழ்நாடு

எஸ்.வி.சேகர் தேடப்படும் நபர்... தகவல் அறிந்தால் தெரிவிக்கும்படி சுவரொட்டி

webteam

கடந்த 25 நாட்களுக்கும் மேல் தலைமறைவாக உள்ள எஸ்.வி.சேகர் தேடப்படும் நபர் என்று சென்னையின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நடிகர் எஸ்.வி.சேகர். அண்மையில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டிருந்தார். இதற்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்தது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கத்தினர், சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கும் மேல் தலைமறைவாக உள்ள எஸ்.வி.சேகர் தேடப்படும் நபர் என்று சென்னையின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதுவரை எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாததால், மயிலாப்பூர், மந்தைவெளி பகுதிகளில் எஸ்.வி.சேகர் பற்றிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், தேடப்படும் நபர் எஸ்.வி.சேகர் என்றும் அவரை பற்றி தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்கும்படி கேட்டுகொள்கிறோம் என்று பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.