விசிக நிர்வாகி மரணம்: சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் pt desk
தமிழ்நாடு

தி.மலை: விசிக ஒன்றிய செயலாளர் மர்ம மரணம் - சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

PT WEB

செய்தியாளர்: R.ஆஜாசெரிப்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொழப்பலூர் கூட்டுச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் சீனுவளவன். இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரணமல்லூர் பகுதி மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், சீனுவளவன் நேற்று ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து கொண்ட நிலையில், நேற்றிரவு பூஜை செய்வதற்காக சென்றுள்ளார். இதையடுத்து அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

விசிக நிர்வாகி மரணம்: சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

இதையடுத்து அவரை தேடியபோது, கொழப்பலூர் கூட்டுச்சாலை அருகே மரத்தில் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து சீனுவளவன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், முறையாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வந்தவாசி - சேத்துப்பட்டு சாலையில் கொழப்பலூர் கூட்டுச்சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு அவர்கள் சாலை மறியலை கைவிட்டுச் சென்றனர். இதையடுத்து சீனுவளவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.