Suspicious death  pt desk
தமிழ்நாடு

புதுக்கோட்டை: சந்தேக மரணம் என புகார் - 2 மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்ட உடல் தோண்டியெடுப்பு

webteam

செய்தியாளர்: நீதி அரசன் சாதிக்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையம்பட்டி காஞ்சிரவயல் பகுதியை சேர்ந்த முருகனுக்கும் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வயலோகம் முதலிபட்டியைச் சேர்ந்த சித்திகா (20) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. முருகன் தனது தாய், தந்தை மற்றும் மனைவி சித்திகாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

Suspicious death

இந்நிலையில் இவர் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி இரவு உணர்ச்சியற்றுக் கிடப்பதாக சித்திகா தனது மாமனாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் முருகனை, காரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து உறவினர்கள் அவரது சடலத்தை அடக்கம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து முருகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி காரையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து இறந்த முருகனின் சடலம் தோண்டி எடுக்கபட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.