தமிழ்நாடு

காவல் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட 7 வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்த பார் கவுன்சில்

நிவேதா ஜெகராஜா
சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சாலை அமைக்கும் விவகாரம் தொடர்பாக மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் 7 பேரை தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்துள்ளது.
சென்னை கோட்டூர்புரம் 4-வது சந்து நாயுடு தெருவை சேர்ந்தவர் தாமஸ் தனசீலன்(63). இவரது வீட்டருகே உயர்நீதிமன்ற வழக்கறிஞரான பத்மநாபன்(40) வசித்து வருகிறார். கோட்டூர்புரம் நாயுடு தெரு 4-வது சந்து அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் பொதுவான பாதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த பாதையில் சிமெண்ட் சாலைகள் அமைக்க மாநகராட்சி முன்வந்தபோது, சாலைகள் அமைத்தால் தனது வீட்டில் மழைநீர் புகுந்துவிடும் எனக்கூறி பத்மநாபன், தாமஸ் தனசீலனுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இருவரும் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 17-ஆம் தேதி இரு தரப்பினரும் வீட்டின் அருகிலேயே சாலை அமைப்பது தொடர்பாக மோதிக்கொண்டனர். மோதிகொண்ட விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு இரு தரப்பினரும் சில வழக்கறிஞர்களுடன் வந்துள்ளனர்.
அப்போது கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்குள் வந்த  இரு தரப்பு வழக்கறிஞர்களும்  சரமாரியாக ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையத்தில் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி வெளியானது.
இதனையடுத்து காவல்நிலையத்தில் மோதிக்கொண்டு விவகாரம் தொடர்பாக மூன்று வழக்குகளை கோட்டூர்புரம் போலீசார் பதிவு செய்தனர். குறிப்பாக சட்டத்தை மதிக்க வேண்டிய வழக்கறிஞர்கள் காவல் நிலையத்திற்கு உள்ளேயே மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலிடம் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் பொதுக்குழு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. பொதுக்குழுவில் 3 புகார்கள் தொடர்பாக பார் கவுன்சில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்
அதில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் சட்டவிதிகளை மீறி மோதிக் கொண்ட விவகாரம் தொடர்பாக ஆறு பேரை சஸ்பென்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இருதரப்பிலும் மோதலில் ஈடுபட்ட  சைதாப்பேட்டை வழக்கறிஞர் சங்க செயலாளர் ஏங்கல்ஸ், மற்றும் பாலமுருகன் மணிகண்டன், பத்மநாபன் ஹரிஹரன், நெப்போலியன், மற்றும் ஒருவர் உள்ளிட்ட 7 பேரை வழக்கறிஞர்கள் பணி செய்வதற்கு தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் இடைக்கால தடை விதித்துள்ளது