தமிழ்நாடு

ஸ்டெர்லைட் வழக்கு: அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

webteam

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரும் வழக்கை உடனே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 22-ம் தேதி போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக பலியாயினர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக முட உத்தரவிட வேண்டும் என்று நாகர்கோவிலைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஸ்டெர்லைட் ஆலையிடம் இருந்து அபராதமாக பெறப்பட்ட 100 கோடி ரூபாயை சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக தமிழக அரசு பயன்படுத்தியதா? என்றும் கேட்டிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் அவர் கோரியிருந்தார். ஆனால், அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோடை விடுமுறைக்கு பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.