தமிழ்நாடு

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

webteam

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

மக்களவைத் தேர்தல், தமிழக இடைத்தேர்தலுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்கக்கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைகால மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இதுவரை பதிவு செய்யப்படாததால் சுயேச்சையாகவே கருதுவதாகவும் இதனால், பொதுச்சின்னம் கொடுக்க முடியாது என்றும், தனித்தனி சின்னம்தான் ஒதுக்க முடியும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோர், இதுதொடர்பான வழக்கில் குக்கர் சின்னம் வழங்க, நீதிபதி கன்வில்கர் ஏற்கனவே கூறியிருந்தபோது அதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யவில்லை என்பதால் குக்கர் சின்னம் கிடைக்கும் எனக் காத்திருந்ததாகவும் வேட்பு மனு தாக்கல் நாளை (இன்று) மதியம் 3 மணிக்கு முடிவடைகிறது என்பதால் இதுகுறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, குக்கர் சின்னம் கொடுக்க முடியாது என்பதற்கு எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் எங்கே? எனத் தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால், ஆவணங்கள் இல்லை எனத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால், முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் ஆவணங்கள் கூட தயார் செய்யாமல் இருப்பது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.  ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட அவர்கள், நாளை (இன்று) காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறி ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் நேற்று மாலை 300 பக்கம் கொண்ட பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்ததும் மனுதாரர் சார்பிலும் தேர்தல் ஆணையத்தின் சார்பிலும் கடும் விவாதம் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் குக்கர் சின்னத்தை ஒதுக்க மறுத்துவிட்டனர்.

எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் பொது சின்னத்தை வழங்க முடியும் என்ற நீதிபதிகள், பதிவு செய்யப்படாத கட்சிகளுக்கு அப்படி வழங்க சட்டத்தில் இடமில்லை என்றும் தெரிவித்தனர். இருந்தாலும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால், பொது சின்னத்தை வழங்க பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தர விட்ட னர்.