ஆல் இந்தியா பர்மிட் ஆம்னி பேருந்து முகநூல்
தமிழ்நாடு

ஆல் இந்தியா பர்மிட் கொண்ட ஆம்னி பேருந்துகள் தடை வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

PT WEB

தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தி இருந்தது.

இதற்காக பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்கனவே மூன்று முறை அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 14ஆம் தேதி முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க போக்குவரத்துத்துறை தடை விதித்தது.

இதனிடையே வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தொடர்பான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் உத்தரவால் வெளிமாநில பேருந்துகளின் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதை தடுக்க கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.