தமிழ்நாடு

நடராஜனுக்கு சிறைக்கு செல்வதிலிருந்து இடைக்கால விலக்கு: உச்சநீதிமன்றம்

webteam

சொகுசு கார் இறக்குமதி தொடர்பான வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிறைக்கு செல்வதிலிருந்து இடைக்கால விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டு ஏற்கனவே பயன்படுத்திய வாகனம் என கூறி, புதிய லெக்ஸஸ் காரை இறக்குமதி செய்ததன் மூலம் 1 கோடியே 62 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக நடராஜன், பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன், வங்கி அதிகாரி சுஜாரிதா சுந்தரராஜன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்திருந்தது.

இதை எதிர்த்து நடராஜன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், விசாரணை முடியும் வரை சிறைக்கு செல்வதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த மனு மீதான விசாரணயின் முடிவில் நடராஜனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறைக்கு செல்வதிலிருந்து இடைக்கால விலக்கு அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.