மூலைக்கரைப்பட்டி காவல்நிலையம் pt web
தமிழ்நாடு

நாங்குநேரி: அன்று சின்னதுரையிடம் வன்முறையில் ஈடுபட்ட அதே மாணவர், இன்று பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்!

PT WEB

செய்தியாளர் - மருதுபாண்டி

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுவர்கள்

கடந்த ஆண்டு ஆக. 9ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கன்கார்டியா பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த சின்னதுரை மீது, அவருடன் கல்வி பயின்ற மாணவர்கள் சிலரே வீடுபுகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில், படுகாயம் அடைந்த சிறுவன் சின்னதுரை ஆறு மாதகால தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து தற்போது பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.

மற்றொருபக்கம் சின்னதுரையை வீடு புகுந்து தாக்கிய மாணவர்கள் கைது செய்யப்பட்டு இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். சிறிது காலத்திற்கு பிறகு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களும் 12 ஆம் வகுப்பு முடித்து தற்போது தெ. கள்ளிகுளம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நாங்குநேரியில் இருந்து மூலக்கரைப்பட்டிக்கு தனது கணவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மூன்று மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக அந்தப் பெண் மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் இருசக்கர வாகனத்தில் தம்பதியினரை பின் தொடர்ந்து வந்தது, 3 இளம் சிறார்கள் என்பது தெரிய வந்தது. அடுத்தடுத்த விசாரணைகளின் முடிவில் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அச்சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் இரண்டு சிறுவர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்று பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பேரில் ம்ேலும் 2 சிறுவர்களையும் காவல்துறை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இவர்களில் ஒரு மாணவன் சின்னதுரையுடன் கடந்தாண்டு பள்ளியில் படித்து வந்த நபர். அதுமட்டுமல்ல, சின்னதுரையை வீடு புகுந்து தாக்கியதில் இவர் முக்கிய பங்காற்றியதும் தெரியவந்துள்ளது.

மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லும்போது அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவே சிறார் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்கு நல் ஆலோசனைகளை வழங்கி நல்வழிப்படுத்தும் முயற்சியில் நீதிமன்றங்களும், சிறார் மையங்களும் செயல்படுகின்றன.

அப்படித்தான் கடந்த ஆண்டு சின்னதுரை மீது தாக்குதல் நடத்தியவர்கள் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு ஜாமீனில் வெளியேவந்தனர். தற்போது கள்ளிகுளம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் பயின்றும் வருகின்றனர். ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக அவர்களில் ஒரு சிறுவன், இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் பெற்றோருக்கும் அக்கறை

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ‘நாங்குநேரி அன்று இன்று’ கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், “சின்னதுரையை தாக்கிய மூன்று மாணவர்களிடம் நான் நேரடியாக விசாரணை மேற்கொண்டேன். அவர்களிடம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு உங்கள் குடும்பத்தில் உங்களை எவ்வாறு பார்க்கிறார்கள்; அக்கம்பக்கத்தினர் எவ்வாறு பார்க்கிறார்கள் என கேள்வி எழுப்பினேன்.

‘முன்பை விட எனக்கு குடும்பத்திலும் அண்டை வீட்டார் மத்தியிலும் மதிப்பு மரியாதை கூடியுள்ளது’ என அந்த மாணவர்கள் பதில் அளித்தனர். இதன் மூலம் அவர்கள் மீண்டும் நல்வழிப் பாதைக்கு திரும்பவில்லை என்பதை அறிந்து கொண்டேன். பெற்றோரும் அவர்களை கண்டிக்கவில்லை. மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் பெற்றோருக்கும் மிகுந்த அக்கறை இருக்கிறது. அவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டால் மாணவ சமுதாயம் செய்யும் தவறுகளை திருத்த இயலாது” என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.