தமிழ்நாடு

படிக்காமல் வீட்டை விட்டு ஓடிய மாணவன் - ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் மீட்பு

webteam

திருவாரூர் அருகே படிக்கவில்லை என பெற்றோர் திட்டியதால், வீட்டை விட்டு வெளியேறிய மாணவன் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையில் மீட்கப்பட்டார்.

திருவாரூர் அருகே இளவங்கார்குடி பகுதியைச் சேர்ந்தவர் விறகு வியாபாரி அறிவழகன். இவரது மகன் மாதேஷ் அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சரியாக படிக்காமல் இருந்த மாதேஷை அவரது பெற்றோர் தொடர்ந்து திட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து படிக்க விருப்பமில்லாத மாதேஷை, கடந்த 2021 பிப்ரவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதுதொடர்பாக திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மாதேஷை தேடி வந்தனர். ஆனால், அவர் இருக்குமிடம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், மாதேஷ் புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார். அந்த புதிய ஆதார் அட்டை இளவங்கார்குடி வீட்டிற்கு வந்துள்ளது. புதிய ஆதார் அட்டை குறித்து போலீசாரிடம் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், மாதேஷ் மும்பையில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து தந்தை அறிவழகனை அழைத்துக் கொண்டு மும்பை சென்ற திருவாரூர் போலீசார், மாதேஷை மீட்டு அழைத்து வருகின்றனர்.