தமிழ்நாடு

நன்கொடையாக வந்த 4 லட்சத்தில் ஏழைகளுக்கு உதவிய பிரதமரின் பாராட்டை பெற்ற மாணவி

webteam

பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்ட மதுரை மாணவி நேத்ரா தனக்கு நன்கொடையாக வந்த 4 லட்சம் ரூபாயை மீண்டும் ஏழை மக்களுக்கு உதவி செய்துள்ளார்.

கொரோனா காலத்தில் மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் தனது மகளின் எதிர்காலத்திற்கு சேமித்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை நிவாரணப் பொருட்கள் மூலம் ஏழை மக்களுக்கு உதவினார். இந்தச் செயலுக்கு பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

அதனையடுத்து பல தன்னார்வலர்கள் தானாக முன்வந்து மாணவி நேத்ராவின் எதிர்காலத்திற்காக சுமார் 4 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினர். அந்தத் தொகையில் மீண்டும் நிவாரண‌ப் பொருட்களை வாங்கி ஏழை மக்களுக்கு நேத்ரா உதவியுள்ளார். இந்தச் செயலை பாராட்டி மாவட்ட குழந்தைகள் நல குழு சார்பாக மாணவி நேத்ராவை சந்தித்து சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது.