காதலியை பழிவாங்கிய சிறுவன் PT
தமிழ்நாடு

‘100 Online ஆர்டர்+77 Online வாகனங்கள் புக்கிங்’- காதலிக்க மறுத்த மாணவியை நூதனமாக பழிவாங்கிய சிறுவன்

PT WEB

செய்தியாளர் - அன்பரசன்

சென்னை பெரியமேட்டில் டியூஷன் படிக்க செல்லும் போது, கல்லூரி மாணவி ஒருவருக்கும் 17 வயது சிறுவனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு தெரிந்து எச்சரிக்கை செய்து இருவரையும் பிரித்துள்ளனர். இந்த காதல் விவகாரத்தில் சிறுவன் தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

love breakup

இந்நிலையில் தொடர்ந்து கல்லூரி மாணவியிடம் அவர் பேசமுயற்சித்துள்ளார். அப்போது அம்மாணவி காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 17 வயது சிறுவன் நூதன முறையில் காதலியையும், அவரது குடும்பத்தையும் பழிவாங்க முயன்றுள்ளார்.

கேஷ் ஆன் டெலிவரியில் புக்செய்து 100 ஆர்டர்களை அனுப்பிய சிறுவன்!

அதன்படி கல்லூரி மாணவியை பழிவாங்க நினைத்து அவரது முகவரிக்கு Amazon, flipkart, swiggy, Zomato உட்பட பல்வேறு டெலிவரி செயலிகளின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்களை போட்டிருக்கிறார்.

Amazon

இதனால் பல டெலிவரி ஊழியர்கள் கல்லூரி மாணவியின் முகவரிக்கு சென்று ஆர்டர் செய்த பொருளை கொடுத்துள்ளனர். குறிப்பாக கல்லூரி மாணவிக்கும் டெலிவரி செய்யும் ஊழியிருக்கும் சண்டை ஏற்பட வேண்டும் என்பதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்த அனைத்து பொருட்களுக்கும் கேஷ் ஆன் டெலிவரி போட்டு சிறுவன் அனுப்பியது தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் டெலிவரி ஊழியர்களிடம் தாங்கள் ஆர்டர் செய்யவில்லை என கல்லூரி மாணவியும் குடும்பத்தினரும் தெரிவிக்கும் போது, ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு பொருட்களுக்கு பணம் தராத ஆத்திரத்தில் டெலிவரி ஊழியர்களும் சண்டையிட்டுள்ளனர்.

மூன்று நாட்களாக ஆன்லைன் மூலம் பொருட்கள் ஆர்டர் செய்து அனுப்பி சிறுவன் டார்ச்சர் செய்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர்.

ஓலா, உபர் வாகனங்களை புக்செய்த சிறுவன்..

ஆன்லைன் டெலிவரி மூலம் மன உளைச்சலில் இருந்த கல்லூரி மாணவியை, மேலும் கொடுமைப்படுத்துவதற்கு ஓலா, உபர் போன்ற வாடகை வாகனங்கள் புக் செய்யும் செயலியின் மூலம் 77 முறை வாகனங்களை புக் செய்து கல்லூரி மாணவியின் முகவரிக்கு அனுப்பி டார்ச்சர் செய்துள்ளார்.

ola, uber

மேலும், telegram மூலம் கல்லூரி மாணவியின் தந்தை இறந்து விட்டதாக போட்டோக்கள் சித்தரித்து குடும்பத்தினரையும் டார்ச்சர் செய்தது தெரிய வந்துள்ளது.

புகாரின் பேரில் சிறுவன் கைது!

இதனையடுத்து கல்லூரி மாணவியின் தந்தையின் புகாரின் அடிப்படையில் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட செயலிகளில் பயன்படுத்திய செல்போன் எண் மற்றும் இமெயில் ஆகியவற்றை கண்டுபிடித்து ஐபி முகவரி மூலமாக சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை செய்த போதுதான், காதல் விவகாரத்தில் அவன் இவ்வளவும் செய்தது தெரியவந்துள்ளது. சிறுவனிடமிருந்து இரண்டு செல்போன்கள் இரண்டு ஒய்பை ரூட்டர்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

flipkart

தற்போது சிறுவனுக்கு 18 வயது ஆரம்பமாகி கல்லூரி முதலாம் ஆண்டு ஆண்டு படித்து வருகிறார். இருப்பினும் குற்றம் புரிந்த கால கட்டத்தில் 17 வயது இருந்த காரணத்தினால் சிறுவனை சிறார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தியுள்ளனர்.

இதையடுத்து சிறுவனுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்பட்டு தாயாருடன் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.