சிவகங்கை புதியதலைமுறை
தமிழ்நாடு

காரைக்குடி | சுரங்கப்பாதையில் தேங்கிய நீர்.. நீந்தி கடக்க நினைத்தவர் உயிரிழந்த சோகம்!

Jayashree A

சிவகங்கையில் கனமழையால் சுரங்கப் பாதையில் தேங்கிய நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிவகங்கையை அடுத்து உள்ள காரைக்குடியில் நேற்று வரலாறு காணாத கனமழையானது பெய்துள்ளது. இது ஒருபுறம் இருக்க.... காரைக்குடி ரயில் நிலையத்திற்கு அருகில் 12 அடி நீளமுள்ள சுரங்கப்பாதை உள்ளது. இதனைப்பயன்படுத்தி அப்பகுதி மக்கள் அடுத்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். நேற்றுப்பெய்த கனமழைக்காரணமாக அந்த சுரங்கப்பாதையானது மழைத்தண்ணீரால் மூழ்கியுள்ளது.

இச்சமயத்தில், 51 வயதான பீட்டர் என்பவர் மழைத்தண்ணீர் தேங்கியுள்ள சுரங்கப்பாதையைப் பயன்படுத்தி பக்கத்து கிராமத்திற்கு சென்று விடலாம் என்று நினைத்து அதில் இறங்கியுள்ளார். ஆனால் அவரால் அதை நீந்தி கடக்கமுடியவில்லை.

இந்நிலையில், சுரங்கத்திற்கு சென்றவர் திரும்பி வராததால், அப்பகுதி மக்கள் இதுக்குறித்து போலிசாருக்கு தகவல் கூறவே, அப்பகுதிக்கு வந்த போலிசார் 2 மணி நேரதேடுதலுக்குப் பிறகு பீட்டரின் உடலை கண்டுபிடித்து மீட்டுள்ளனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.