தமிழ்நாடு

நாமக்கல்: விபத்தில் சிக்கியவரிடம் சாதிப் பெயர் கேட்ட எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்

JustinDurai
குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியில் அடிபட்டு கால் துண்டிக்கப்பட்ட நிலையில் துடித்துக் கொண்டிருந்தவரிடம் சாதிப் பெயரை கேட்ட சிறப்பு காவல் உதவியாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
திருவண்ணாமலையை சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள், கோவையில் பணியாற்றுவதற்காக வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மோதியதில் தொழிலாளர்கள் சென்ற வாகனம் கவிழந்தது. இதில் ஒரு கூலித் தொழிலாளியின் கால் லாரியின் சக்கரத்தில் ஏறி துண்டானது.
அப்போது அங்கு வந்த குமாரபாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அத்தியப்பன், காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்ற உதவி செய்யாமல் அவர்களது சாதி பற்றி கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான காணொலியும் வெளியானதால், சிறப்பு காவல் உதவியாளரின் செய்கை சர்ச்சைக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அவர் நாமக்கல் ஆயுதப்படைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.