Car Festival pt desk
தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை திருவிழா - ரெங்கா ரெங்கா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

webteam

செய்தியாளர்: வி.சார்லஸ்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 28.04.2024 அன்று கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் நம்பெருமாள், கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், யானை வாகனம், தங்கக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Car Festival

இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான இன்று (06.05.2024) நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். அப்போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா ரெங்கா என கோஷமிட்டபடி, பக்தி பரவசத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதைத் தொடர்ந்த திருத்தேர் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது.

தேரோட்டத்தை காணவரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டத்திற்காக திருச்சி மாவட்டத்திற்கு இன்று (06.05.2024) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.