ஸ்ரீமதியின் தாயார் pt web
தமிழ்நாடு

“மடிப்பிச்சையா கேட்குறேன்; வாய்ப்பு கொடுங்க”-விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஸ்ரீமதியின் தாயார் போட்டி!

PT WEB

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி, உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வேட்பு மனுத்தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளில் இருந்து சுயேட்சைகள் பலர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான அதிமுக இத்தேர்தலை புறக்கணித்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இன்று பிற்பகல் மூன்று மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. மொத்தம் 64 பேர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்களை திரும்பப் பெற 26 ஆம் தேதி கடைசி நாளாகும். வாக்குப்பதிவு ஜூலை 10 ஆம் தேதி நடத்தப்பட்டு, தேர்தல் முடிவு ஜூலை 13ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த இடைத் தேர்தலில் மாணவி ஸ்ரீமதியின் தாயார் போட்டியிடுகிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த இரண்டு வருடங்களாக எத்தனை கொடுமைகளை அனுபவிக்கனுமோ அத்தனையும் அனுபவித்துள்ளேன். அந்த அனுபவமே இடைத்தேர்தலில் போட்டியிட வைத்துள்ளது. மக்களுக்கு சேவை செய்ய நினைத்தோம் என்றால் சாதாரண மக்களாக இருந்து யாருக்கும் சேவை செய்ய முடியாது.

என் முழு நோக்கமும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான். நான் பட்ட இன்னல்களையும் துன்பங்களையும் மக்கள் படக்கூடாது என்ற நோக்கத்தோடு போட்டியிடுகிறேன். மக்கள் பெரும் ஆதரவு கொடுத்து வாய்ப்பு அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.