தமிழக மீனவர்கள் முகநூல்
தமிழ்நாடு

எப்பொழுது கிடைக்கும் தீர்வு? தமிழக மீனவர்களை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேரை அக்டோபர் 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

நாகை மற்றும் மயிலாடுதுறை சேர்ந்த மீனவர்கள், கடந்த 21ஆம் தேதி மாலை நெடூந்தீவு கடற்பரப்பில் மூன்று மீன்பிடி படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் யாழ்ப்பாணம் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து முதற்கட்ட விசாரணை நடத்திய பிறகு, யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்களை ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து, தமிழக மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் பருத்திதுறை நீதிமன்ற நீதிபதி வீட்டில் அவர்களை ஆஜர்படுத்தினர். அப்போது, மீனவர்கள் 37 பேரையும் அக்டோபர் 4ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களுக்கு ராமேஸ்வரம் அனைத்து மீனவ சங்க கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, மயிலாடுதுறை மற்றும் பூம்புகார் பகுதிகளில் மீனவ அமைப்பினர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.