Fisherman arrested pt desk
தமிழ்நாடு

ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 33 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாட்டுப் படகு மீனவர்கள் 33 பேரை, இலங்கை கடற்படை சிறை பிடித்துச் சென்றது.

webteam

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். அப்போது மீனவர்கள், இலங்கை மன்னார் தெற்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சார்லஸ், சூசை, ரஞ்சன் மற்றும் அலெக்ஸ் ஆகிய நான்கு பேருக்குச் சொந்தமான நான்கு நாட்டு படகுகளை பறிமுதல் செய்தனர்.

boat

மேலும் அதிலிருந்த செல்வநாதன், சதீஷ், அந்தோணி, ஆரோக்கியம், அந்தோணி முத்து, கணேசன், கமல்ராஜ் உட்பட மொத்தம் 33 மீனவர்களையும் கைது செய்து புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். 33 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் அனைவரும் புத்தளம் கடற்படை மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வாரியபொல சிறையில் அடைக்கப்படுவார்கள் என இலங்கை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களில் 33 பேரின் பெயர்கள் தற்போது வரை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற நாட்டு படகுகளில் 35 மீனவர்கள் இருக்கக்கூடும் எனவும் பாம்பன் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.