சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் pt web
தமிழ்நாடு

ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்ட இஸ்லாமியர்கள்.. பக்ரீத் பண்டிகையை ஒட்டி சிறப்புத் தொழுகை!

PT WEB

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி ஒன்றிணைந்து தொழுகையில் ஈடுபட்டனர். அனைவரும் நலமுடன் வாழ வேண்டி வழிபாடு நடத்திய அவர்கள், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்த தொழுகையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா கலந்து கொண்டார்.

பெரம்பலூர் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த பள்ளிவாசலில், சிறப்புத் தொழுகை நடத்தி இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூர்ந்தனர். இதில் 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டு தொழுகையில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தைப் போல, புதுச்சேரியில் உள்ள கடற்கரை, குத்பா பள்ளி, நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளி மற்றும் காரைக்காலில் உள்ள பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், சகோதரத்துவம் தழைத்தோங்கவும், பேரிடர்களில் இருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

தொழுகையில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.