கண்மை டப்பா புதியதலைமுறை
தமிழ்நாடு

சிவகங்கை |கண்மை டப்பாவை விழுகிய ஒரு வயது குழந்தை.. மூச்சுக்குழாயில் சிக்கியதால் பறிபோன உயிர்!

Jayashree A

ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தை வளர்ப்பு என்பது சவாலான விஷயம். அதுவும் 3 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளின் அழுகையை பெற்றோரைத்தவிர மற்றவர்கள் புரிந்துக்கொள்வது என்பது இயலாது. அதே சமயம் பெற்றோர்களும் குழந்தைகளை அதிக கவனத்துடன் வளர்க்கும் பொறுப்பில் இருக்கின்றனர். முக்கிய பொருட்களை அவர்களுக்கு விளையாட கொடுக்கவோ அல்லது அருகில் வைத்துவிட்டுச் செல்லவோ கூடாது.

மதுரையைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் . இவர் அஞ்சல் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன தரன் தேவா என்ற குழந்தை ஒன்று இருந்துள்ளது. இவர் தனது மனைவியின் சகோதரி குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சிவகங்கை சென்று இருக்கிறார். நிகழ்ச்சிக்கு அனைவரும் தயாராக இவரது குழந்தையையும் தயார் செய்துள்ளனர்.

குழந்தைக்கு தலைசீவி பொட்டு வைத்துவிட்டு மை டப்பாவை குழந்தையின் அருகிலேயே விட்டுச் சென்றுள்ளனர். யாரும் கவனிக்காத நிலையில் குழந்தை கண்மை டப்பாவை எடுத்து வாயில் போட்டு விழுங்கி இருக்கிறது. அதைக்கண்ட அக்குழந்தையின் தாய் வாயிலிருந்து மை டப்பாவை எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் குழந்தை மை டப்பாவை விழுங்கியுள்ளது. இதில் மை டப்பாவானது குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கி மூச்சுதிணறியுள்ளது. உடனடியாக,

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டு சென்ற நிலையில், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.