பாடகர் மனோ மகன்கள் மீது வழக்குப் பதிவு  புதிய தலைமுறை
தமிழ்நாடு

தலைக்கேறிய மதுபோதை.. மாணவர்களை தாக்கிவிட்டு தலைமறைவான பாடகர் மனோவின் மகன்கள்.. தேடும் காவல்துறை!

ஜெ.அன்பரசன்

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகர் 10 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கிருபாகரன் (20). 3 ஆம் ஆண்டு கல்லூரி மாணவரான கிருபாகரனும் அதே பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது ஐ.டி.ஐ படித்துவரும் சிறுவனும், நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

மனோவின் மகன்கள்

இவர்கள் இருவரும், இன்று அதிகாலையில் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் ஏ.கே.ஆர் நகரில் உள்ள கால்பந்து விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி எடுக்க சென்றுள்ளனர். பயிற்சிக்குப் பின்னர், அதே பகுதியில் உள்ள திரைப்பட பாடகர் மனோ வீட்டின் வழியே சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த பாடகர் மனோவின் மகன்களான ரஃபிக் (35), சாஹிர் (38) மற்றும் இவர்களது நண்பர்கள் 2 நபர்கள் என 4 பேரும் சேர்ந்து, நடந்து சென்ற கிருபாகரனையும் அவருடன் இருந்த சிறுவனையும் அழைத்து “எதற்காக இங்கு நிற்கின்றீர்கள்?” என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், போதையிலிருந்த பாடகர் மனோவின் மகன்களான ரஃபிக், சாஹிர் மற்றும் அவர்களின் நண்பர்கள் சேர்ந்து கிருபாகரன் மற்றும் அவரது நண்பரை தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்தனர். கிருபாகரனுக்கு பின்னந்தலையில் 3 தையல்கள் போடப்பட்டுள்ளது. மேலும், சிறுவனுக்கு உள் காயம் மற்றும் வெளிப்புற காயம் ஏற்பட்டுள்ளது.

மனோவின் மகன்கள்

இந்த நிலையில், கிருபாகரன் மற்றும் அவரது நண்பரை மதுபோதையிலிருந்த பாடகர் மனோவின் மகன்களான ரஃபிக் மற்றும் சாஹிர் மற்றும் இவர்களது நண்பர்கள் ஆபாசமாக பேசி கட்டையால் தாக்க முற்படுவதும், பின்னர் கைகளால் தாக்குவதும் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வீடியோ காட்சிப்பதிவுகள் அடிப்படையில் தாக்குதல் நடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஷ் (28), தர்மா (23) ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் பாடகர் மனோவின் மகன்களான ரஃபிக் மற்றும் சாஹிர் ஆகிய இருவரை வளசரவாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.