தமிழ்நாடு

“மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை” - போலீசில் நடிகை புகார்

Rasus

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக குறும்பட நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் வசித்து வரும் பெண் ஒருவர் நேற்றிரவு வடபழனி காவல் நிலையத்திற்கு வந்து திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் உடனடியாக அப்பெண்ணை மீட்டு விசாரித்தனர். விசாரணையில், தான் ஒரு குறும்பட நடிகை என்று அப்பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பக்ரூதீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது எனக் கூறிய அப்பெண், இதனை வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பக்ரூதீன் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறினார். மேலும் அதுதொடர்பான ஆபாச படங்களை எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்தார். தன்னுடைய தாயாரை கொன்று விடுவதாகவும் பக்ரூதீன் மிரட்டுவதாக போலீசில் அந்த நடிகை புகார் தெரிவித்தார்.

இந்தப் புகாரின் பேரில் பக்ரூதீன் மீது 323- காயம் ஏற்படுத்துதல், 376- பாலியல் வன்கொடுமை, 506(1)- கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், பக்ரூதீனுக்கும் நடிகைக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பணம் கொடுக்கல் வாங்கலில் இருவருக்கிடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக புழல், திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் ஏற்கெனவே நடிகை புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.