தமிழ்நாடு

''பொள்ளாச்சி குற்றவாளிகளை வெளியே நடமாடவிடுவது பேராபத்து - ஜி.வி.பிரகாஷ் ட்வீட்

''பொள்ளாச்சி குற்றவாளிகளை வெளியே நடமாடவிடுவது பேராபத்து - ஜி.வி.பிரகாஷ் ட்வீட்

webteam

தமிழ்நாடே குலைநடுங்கும் வகையில் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  தன்னை நம்பி வந்த ஒரு இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

200க்கும் மேற்பட்ட பெண்ககளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது 20 பேர் கொண்ட கும்பல். 7 ஆண்டுகளாக நடந்த இந்த கொடூரம் தொடர்பாக சமீபத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் பின்னணியில் பெரிய கும்பலே இருப்பதாகவும் அவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவத்துக்கு நடிகர்கள் சித்தார்த், ஜிவி பிரகாஷ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜிவி பிரகாஷ்குமார், அந்த மிருகங்களை வன்மையாக கண்டிக்கிறேன்... மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது. இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள நடிகர் சித்தார்த்,பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்போது தான் அவர்கள் தைரியமாக முன்வந்து அந்த குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி அளிப்பார்கள். சமூக வலைதளங்களை ஆயுதமாக வைத்து பெண்கள் மீது தொடுக்கப்படும் துன்புறுத்தல்கள் பெரும் அச்சுறுத்தல் என்றும், நாம் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்