தமிழ்நாடு

பாலியல் புகார் எதிரொலி : அரசு காப்பகங்களுக்கு சிறுமிகள் மாற்றம்

பாலியல் புகார் எதிரொலி : அரசு காப்பகங்களுக்கு சிறுமிகள் மாற்றம்

Rasus

பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக மதுரையில் உள்ள காப்பகத்தில் இருந்த சிறுமிகள் அரசு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சமயநல்லூர் அருகே தனியார் தொண்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் காப்பகத்தில், பதின்ம வயதுடைய 25 சிறுமிகள் தங்கி இருந்தனர். தொண்டு நிறுவனத்தின் உறுப்பினரான ஆதிசிவன் என்பவர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், ஆதிசிவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதையடுத்து, சமூக பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அதிகாரிகள், அந்தக் காப்பகத்தில் ஆய்வு நடத்தினர். இதையடுத்து, அங்கு தங்கி இருந்த 2‌5 சிறுமிகள், முத்துப்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் அரசு காப்பகங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.