தமிழ்நாடு

ஐ.ஜி மீதான பாலியல் புகார் வழக்கு : நாளை தீர்ப்பு

webteam

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

காவல்துறை ஐ.ஜிக்கு எதிராக பெண் எஸ்.பி. கொடுத்த பாலியல் புகார் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், ஐஜி-க்கு எதிராக பெண் எஸ்.பி. காவல் துறையினரிடம் புகார் அளிக்காமல் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநரிடம் புகார் அளித்ததாலேயே, நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி, பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள் பெறும் போது, நடைமுறை குறைகளை கருத்தில்கொள்ளாமல், துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார். மேலும், ஐஜி-க்கு எதிராக பெண் அதிகாரி கொடுத்த பாலியல் புகார்மீது லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் உடனடி நடவடிக்கை எடுக்காததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.