தமிழ்நாடு

'ஒரே நாடு-ஒரே தேர்தல் மூலம் இந்தியாவை வல்லரசாக மாற்ற நினைக்கிறார் மோடி ஜி'- செல்லூர் ராஜூ

webteam

"உதயநிதி, முக.அழகிரி சந்திப்பு மூலம் பாலாறும் தேனாறும் ஓடப் போகிறதா? வாரிசு அரசியல் என்பதற்கான எடுத்துகாட்டு இது" என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலலிதா சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்...

“உதயநிதி, மு.க.அழகிரி சந்திப்பு மூலம் தமிழ்நாட்டில் பாலாறு தேனாறு ஏதேனும் ஓட போகிறதா? வாரிசு அரசியல் என்பதற்கான எடுத்துகாட்டு இது. இச்சந்திப்பினால் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. மதுரையில் ஏற்கனவே ரவுடிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அழகிரி சந்திப்பு மூலம் என்னவாக போகிறது? ஒன்னுமே இல்லை!

விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி, நேரு ஸ்டேடியத்தில் சிந்தடிக் டிராக் அமைப்பதற்கு 3 மணி நேரம் மாணவர்களை காக்க வைத்துள்ளளனர். பொறுப்பாக அவர் செயல்படவில்லை.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல மு.க.ஸ்டாலின் எல்லா இடங்களிலும் உதயநிதி சிறப்பாக செயல்படுவதாக கூறி வருகின்றார். கருணாநிதியை கலைஞர் என ஏன் குறிப்பிடுகிறோம். ஏனெனில் அவர் நடிக்க கூடியவர். அவர்கள் குடும்பமே நடிப்பவர்கள் தான். எதிர்பார்த்த மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. கடன்சுமை அதிகரிப்பு, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தரவில்லை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

பாலமேடு ஜல்லிகட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜனுக்கு குறைந்த நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆளுநர் உரையின் போது தரக்குறைவாக மதித்து எதிர்த்து திமுக கூட்டணி கட்சியினர் கோஷம் போட்டது மரபு மீறிய செயல். முதல்வர், ஆளுநர் உரையை கண்டித்து பேசியது தமிழக மற்றும் சட்டமன்ற வரலாற்றில் கரும்புள்ளி. எதிர்காலத்தில் இதுபோல நடக்கக் கூடாது. இதற்காகவே ஆட்சியை கலைக்கலாம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றதிற்கும் தேர்தல் வந்தால் திமுகவை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்களும் திமுகவினருமே தயாராக உள்ளனர்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் வீண் செலவுகளை குறைக்க முடியும் என்பதால் இது மோடி-ஜியின் கனவு திட்டம். இதன் மூலம் இந்தியாவை அவர் வல்லரசு நாடாக மாற்ற நினைக்கிறார். மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்கத்தில் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆருக்கு சிலை வைக்க வேண்டும். எம்.ஜி.ஆரை பெரியப்பா என சொல்லும் மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆர் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.