தமிழ்நாடு

உங்க ஆர்வத்துக்கு அளவில்லையா மக்களே: மலைபாம்புடன் செல்ஃபியாம்!

Rasus

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே முட்டையிட்டு அடைகாத்துவரும் மலைப் பாம்புடன், மக்கள் செல்ஃபி எடுக்க முயற்சிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள போடூர் வனப் பகுதியில் விலங்குகள் அதிகளவில் உள்ளன. காட்டு யானைகள் அடிக்கடி வந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. அதுமட்டு மின்றி இந்த பகுதியில் மலைப் பாம்புகளும் அதிகம் உள்ளன. இவை அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன.

கடந்த சில நாட்களாக போடூர் பகுதியில் உள்ள தட்சிண திருப்பதி பெருமாள் கோவில் அருகே ஒரு பாறையின் அடியில் மலைப் பாம்பு இருந்தது. எந்த சலனமும் இன்றி அசைவற்று இருந்தததால் அந்த பாம்பு இறந்திருக்கலாம் என அந்த பகுதி வழியே சென்றவர்கள் நினைத்தனர்.

இதனால் ஒரு சிலர் கம்பு மூலம் அந்த பாம்பின் மீது குத்திப்பார்த்தனர். அப்போது பாம்பு லேசாக அசைந்து கொடுத்தது. அதன் அருகில் 15-க்கும் மேற்பட்ட முட்டைகள் இருந்தன.

மேலும் அதிகளவில் முட்டையிட்டு வருகிறது. இதையறிந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஏராளமானோர் அங்கு சென்று அந்த பாம்பை வேடிக்கை பார்த்து செல்கின்றனர். ஒரு சிலர் அந்த பாம்புக்கு தொல்லை கொடுக்கின்றனர். இதனால் அந்த பாம்பு ஆக்ரோஷத்தில் புஸ் என சத்தம் கொடுக்கிறது.

வனத்துறைக்கும் இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் ஆபத்தை உணராமல் ஆர்வத்துடன் அந்த பாம்பு இருக்கும் பகுதியில் செல்பி எடுப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.