தமிழ்நாடு

“பணம் வாங்கும்போது இனிக்குதா?’ - நெருக்கடி கொடுத்த நிதி நிறுவனம்: சிறைபிடித்த பெண்கள்

webteam

திருச்சி அருகே கடன் தவணையை கட்ட நெருக்கடி கொடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் இருவரை மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சிறைபிடித்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மருதூர் ஊராட்சியில் உள்ள மேலத்தெருவில் வசிக்கும் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள், மண்ணச்சநல்லூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் நிறுவனத்திடம் மாதாந்திர தவணைக்கு கடன் வாங்கியுள்ளனர்.

தற்போது ஊரடங்கால் வேலைவாய்ப்பின்றி தவித்து வரும் நிலையில் கடன் தவணையை கட்ட முடியவில்லை எனத் தெரிகிறது. இதனால் நிதி நிறுவனம் மிகுந்த நெருக்கடி கொடுத்துள்ளது. நேற்று காலையில் வந்த நிதி நிறுவன மேலாளர் தவணைத் தொகை கட்டாததால் தரக்குறைவாக அநாகரிகமான வார்த்தைகளால் பேசியுள்ளார் எனக் கூறப்படுகிறது. பணம் வாங்கும்போது இனிக்குதா எனவும் திட்டியுள்ளார். இதனால் இவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து நிதி நிறுவன ஊழியர்கள் சக்திவேல், ராம்குமார் ஆகிய இருவரும் தவணைத் தொகையை கேட்டு மீண்டும் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. சுய உதவிக் குழு பெண்கள் தங்களுடைய வறுமை நிலையை எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதனை கேட்காமல் தொடர்ந்து தவணைத் தொகையை கட்ட வற்புறுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் இருசக்கர வாகனத்தையும், ஊழியர்களையும் சிறை பிடித்தனர். தகவலறிந்து வந்த சமயபுரம் போலீசார் ஊழியர்களையும் இரு சக்கர வாகனத்தையும் மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் மகளிர் சுய உதவி குழு பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் தானியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.