சீமான், விஜய் pt web
தமிழ்நாடு

“உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் நாங்கள் இணைந்து இயங்குகின்றோம்” - விஜய்யின் அரசியல் குறித்து சீமான்

நாங்கள் இரண்டு பேரும் இணைந்தால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் இணைந்து இயங்குகின்றோம் என விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

Angeshwar G

நாம் தமிழர் கட்சியின் சார்பில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சீமான் தலைமையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் சீமான் ஆலோசனை செய்தார்.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த தேர்தல் மட்டுமல்ல வரும் 26 தேர்தலும் எங்களுக்கான களம்தான். இந்த களத்தை முன் தயாரிப்பு செய்யும் பணிகள்தான் தற்போது நடந்து வருகின்றது. 33 சதவீத இடஒதுக்கீடு பற்றி பேசும் பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிற்க பெண்களுக்கு வாய்ப்பளிக்குமா? நீட் தேர்வை ரத்து செய்ய உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து வாங்குவதால் என்ன பயன்? யாரிடம் அதை கொடுப்பீர்கள்? இது நடக்காது என தெரிந்தும் நடத்தும் நாடகம் இது, தற்போது இருப்பது கட்சி அரசியல், தேர்தல் அரசியல்தான்; மக்களுக்கான அரசியல் இல்லை.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமருக்கு விருப்பம் இல்லை. மு.க.ஸ்டாலின் பிரதருக்கு கடிதம் அனுப்பி என்ன பயன்? இவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கமாட்டார்கள். ஏனெனில் எவ்வளவு காலமாக தமிழர்களை ஏமாற்றி அவர்களது இடத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரிந்து விடும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நாங்கள் சொல்லலாம். ஆனால் அதை செயல்படுத்த வேண்டிய முதல்வரே சொல்லலாமா?” என்றார்.

இதையடுத்து ‘நடிகர் விஜய் கட்சி ஆரம்பிப்பாரா? அவருடன் கூட்டணி சேர்வீர்களா?’ என்று அவரிடம் கேள்விகேட்கப்பட்டது.

“நாங்கள் இரண்டு பேரும் இணைந்தால் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் இணைந்து இயங்குகின்றோம். முதலில் அவர் வர வேண்டும், கட்சி ஆரம்பிக்க வேண்டும், அவரது கொள்கைகளை சொல்ல வேண்டும். நான்தான் முன்னாடி நிற்கும் அண்ணன், அவர்தான் என்னோடு வருவதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும். நான் போய் கேட்க முடியாது, அவர் கட்சி ஆரம்பிக்கும்போது அவரிடம் போய் கேளுங்கள்” என்றார்.