seeman, Vijay pt
தமிழ்நாடு

"என்னை விமர்சனம் செய்தவர்கள் இப்போது விஜய்யை விமர்சனம் செய்கின்றனர்"- சீமான் பேட்டி

webteam

செய்தியாளர்: மாதவன்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி திருக்கொள்ளிக்காடு அருகே உள்ள அருள்மிகு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

" தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. வலிமையான கடற்படை வைத்திருக்கும் ஒன்றிய அரசு தமிழக மீனவர்களை காக்க மறுப்பது ஏன்? மீனவர்களது வாக்கு தேவை. ஆனால், அவர்களது வாழ்க்கை மற்றும் உயிரைப் பற்றி கவலை இல்லை. நாங்கள் ஆட்சியில் இருந்தால் தமிழக மீனவர்களை தொடமுடியுமா?" என்றார்.

Seeman

தொடர்ந்து பிரதமரின் உக்ரைன் பயணத்தை பற்றி கேட்டபோது, "ஊர் ஊராய் சுற்றுபவனை நாடோடி என்பார்கள். இவர் நாடு நாடாக சுற்றுபவர். நரேந்திர மோடி உக்ரைன் நாட்டை பார்க்கவில்லைபோல அதற்காக சென்றுள்ளார். முதலமைச்சர் அமெரிக்க பயணம் சென்று பத்தாயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக முதலமைச்சரும் டி.ஆர்.பி.ராஜாவும் கூறி வருகின்றனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்று வழக்கு தொடருவேன். முதலமைச்சர் ஆல் இந்தியா புரோக்கர், பிரதமர் இண்டர்நேஷனல் புரோக்கர். இவர்கள் தலைவர்கள் அல்ல தரகர்கள்.

நடிகர் விஜய் கொடி அறிமுகப்படுத்தியதை வரவேற்கின்றேன். வாழ்த்துகின்றேன்" என்றவரிடம் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, " நான் உங்களிடம் மாட்டிக் கொள்வதால் என்னிடமே இந்த கேள்வியை கேட்கின்றீர்கள். விஜய் மாநாடு போட்டு கட்சியை அறிவிக்கும்போது, அவரிடம் இந்தக் கேள்வியை கேளுங்கள். என்னை விமர்சனம் செய்து கொண்டிருந்தவர்கள் தற்போது விஜய்யை விமர்சனம் செய்கின்றனர். எனக்கு விமர்சனங்கள் அலுத்துவிட்டது" என்று சீமான் தெரிவித்தார்.