தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களிடையே கோஷ்டி மோதலை தடுக்க, சென்னை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்

நிவேதா ஜெகராஜா

இரு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் மாணவரொருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சென்னையில் இரு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் மாநில கல்லூரி மாணவரான குமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று திடீரென திருநின்றவூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பிரச்சனைக்குரிய மாணவர்களை கண்டறிந்து கவுன்சிலிங் வழங்க வேண்டும் என அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சென்னை காவல்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் மோதலை தடுக்க சென்னை புறநகர் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல், அரக்கோணம் - சென்ட்ரல், செங்கல்பட்டு சென்ட்ரல் ஆகிய மார்க்கத்தில் செல்லக்கூடிய புறநகர் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டி.எஸ்.பி முத்துகுமார் தலைமையில் ஆய்வாளர் மற்றும் 25 காவலர்கள் இணைந்து மின்சார ரயில்களில் செல்லக்கூடிய கல்லூரி மாணவர்களை கண்காணித்தும், அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஒரு ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் 25 ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.