High court Madurai pt desk
தமிழ்நாடு

வெளியூர் செல்லும் விளையாட்டு வீராங்கனைகளின் பாதுகாப்பை ஊறுதி செய்ய வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு

webteam

செய்தியாளர்: இ.சகாய பிரதீபா

தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் தமிழ்செல்வன். கடந்த 2018ல் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டி விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தனது பள்ளி மாணவிகளை ஆசிரியர் தமிழ்செல்வன் அழைத்து வந்திருந்தார். அப்போது மாணவிகளை இரவு நேரத்தில் தங்குவதற்கு ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

chess

இது குறித்து அந்த மாணவி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார், உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வனை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் கடந்த 2021ல் உடற்கல்வி ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது. 50 ஆயிரம் இழப்பீடும் வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வன், மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், "மனுதாரருக்கு தண்டனை வழங்கிய உத்தரவில் தலையிட வேண்டியதில்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. படிப்பையும், விளையாட்டையும் தொடர முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி இருப்பதால் 50 ஆயிரம் இழப்பீடு என்பது 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

Court order

படிக்கும் இடங்களில் இருந்து விளையாட்டிற்காக வெளியில் செல்லும் போது மாணவிகளை பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம். அப்போது தான் அவர்களால் படிப்பையும், விளையாட்டையும் தொடர முடியும். எனவே, விளையாட்டுப் போட்டிகளுக்காக மாணவிகள் வெளியூர் செல்லும் போது அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரை அரசு செலவில் உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.

விளையாட்டிற்காக செல்லும் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு உடனடியாக உரிய தண்டனை பெற்றுத் தரவும் தேவையான சட்டத் திருத்தங்களை தலைமை செயலாளர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை 2025ம் ஆண்டு பிப்ரவரி 2வது வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.