தமிழ்நாடு

மாணவர் கைகளில் கலர் கலராக சாதி கயிறுகள் - நடவடிக்கை எடுக்க உத்தரவு 

webteam

தமிழ்நாட்டில் மாணவர்களை ஜாதிவாரியாக கயிறுகள் கட்டச் சொல்லும் பள்ளிகளை கண்டறிந்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

2018 தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில் பள்ளிக்கல்வி துறைக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டிலுள்ள ஒருசில பள்ளிகளில் மாணவர்கள் விதவிதமான நிறங்களில் கையில் கயிறுகள் கட்டி உள்ளனர். குறிப்பாக அவை மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் காவி ஆகிய நிறங்களில் கயிறுகள் கட்டியிருக்கின்றனர். இந்தக் கயிறுகள் மூலம் மாணவர்களின் ஜாதிகள் கண்டுபிடிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து அவ்வாறு நடக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிக்கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பள்ளிக் கல்வி துறையின் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி அவ்வாறு நடக்கும் பள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.