பொம்மலாட்டம் pt web
தமிழ்நாடு

பொம்மலாட்டத்தின் வழியே பாடம்... மாணவர்கள் மனதில் பதியச் செய்யும் மாயவித்தை

மனிதனை மகிழ்விப்பதில், பெரும்பங்கு வகிப்பது கலைகள். பொதுப் பிரச்னைகளை எளிமையாக மக்களிடம் அதன் காரம் குறையாமல் சேர்த்துவிடும் கலைகளில் ஒன்றுதான் பொம்மலாட்டம். சுதந்திர போராட்டக் காலத்தில் பெரும் பங்கு வகித்த பொம்மலாட்டம், திரைப்படங்களுக்கே முன்னோடி.

PT WEB

ஒரு காலத்தில் கிராமத்து வீதிகள் தோறும், மாலை நேரங்களில் மக்களை ஈர்த்து கதை சொன்ன பொம்மலாட்டம், அருவெறுப்பு இல்லாமல் அனைவரையும் ஒருங்கிணைத்த பொம்மலாட்டம், ராகம்போட்டு, நாட்டுப்புற பாடல் சேர்த்து தேனும் திணைமாவும் போல கதை சொன்ன பொம்மலாட்டம்... தற்போது அருகிவிட்டது.

அழிவின் விளிம்பில், ஊசலாடிக் கொண்டிருக்கும் பொம்மலாட்டத்தை மீட்கும் விதமாக பள்ளிச் சிறுவர்களுக்கு சொல்லிக்கொடுக்கின்றனர் இரண்டு ஆசிரியர்கள். எப்போதெல்லாம் விடுமுறை கிடைக்கிறதோ, அந்த நேரத்தில், சிறுவர்களை அழைத்துவரும் ஆசிரியர்கள், துள்ளல் பாடல்களுடன் பொம்மலாட்டத்தில் சிரிக்க சிரிக்க கதை சொல்லி சிந்திக்க வைக்கின்றனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த கண்ணாப்பூர் அரசு தொடக்கப் பள்ளியின் நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர், பொம்மலாட்டத்துக்கும் ஆசிரியர். கண்ணைக் கெடுக்கும் செல்போன், தொலைக்காட்சி பெட்டிகளை உதறிவிட்டு ஓடிவரும் குழந்தைகள் பொம்மலாட்டம் உயிர்பெறும் இடமாக இருக்கிறது. கதையாக சொல்லப்படும் பாடம், அவர்களை அறியாமலேயே ஆழ்மனதில் பதியச் செய்வது பொம்மலாட்டத்தின் மாய வித்தை.

இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறுகையில், “இன்று பொம்மலாட்டம் அழிந்து கொண்டிருக்கும் கலைகளில் சேர்ந்துவிட்டது. நிறைய பேருக்கு பொம்மலாட்டம் என்பது தெரியவில்லை என்பதுதான் உண்மை. கலையை மீட்டெடுக்க வேண்டும்.

மாணவர்களுக்கு கற்றல் மேல் ஆர்வம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பொம்மலாட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை செய்துகொண்டு வருகிறேன். மாணவர்களது கற்றல் திறனில், அதாவது நாம் படிக்கின்றோம் என தெரியாமலேயே பொம்மைகள் மூலமாக கருத்துக்களை சொல்லும்போது அவர்கள் மனதில் ஆழமாக பதிகிறது. மாணவர்களும் ஆர்வமாக கற்றுக்கொள்கின்றனர்” என தெரிவித்தார்.

முதன்முறை அழைத்துவரப்படும் குழந்தைகள், மறுமுறை தானாக ஓடிவருகின்றனர் என்பதும், பொம்மலாட்டத்தை விரும்பி கற்பதும் வளமிக்க சமுதாயம் உருவாவதற்கு சாட்சி...