புதுக்கோட்டை | மஞ்சள்காமாலை பள்ளி புதிய தலைமுறை
தமிழ்நாடு

புதுக்கோட்டை | 5 நாட்களில் 12 பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து மஞ்சள் காமாலை நோய்!

PT WEB

புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் பகுதியில் மாணவர்களுக்கு அடுத்தடுத்து மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதால் அப்பகுதியினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து புதியதலைமுறையில் செய்தி வெளியான நிலையில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

வயலோகம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தெரு பகுதியில் கடந்த 5 நாட்களில்12 மாணவ மாணவிகளுக்கு அடுத்தடுத்து மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதில் கழிவு நீர் கலந்தது தெரியவந்தது. இந்த குடிநீரை குழந்தைகள் குடித்ததால்தான் அவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டினர். கடந்த ஜூன் மாதம் அதே கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் நித்தீஸ்வரன் மஞ்சள் காமாலையால் உயிரிழந்த நிலையில், அப்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனக் கூறுகின்றனர்.

இதுகுறித்து புதியதலைமுறையில் செய்தி வெளியான நிலையில் அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ் பிரபு, ஒன்றிய ஆணையர் அபிராமி சுந்தரி உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் அந்தப் பகுதியில் நிலவும் சுகாதாரமற்ற சூழலையும் பார்வையிட்டனர்.

அப்போது பொதுமக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொது மக்களை சமாதானம் செய்த அதிகாரிகள் உடனடியாக தூய்மையான குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்து சென்றனர்.