தமிழ்நாடு

‘அத்தை’ எனக் கூறி பள்ளியிலிருந்து சிறுவன் கடத்தல்.. 10 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..!

Rasus

சென்னை புளியந்தோப்பில் 3 வயது சிறுவனை பள்ளியில் இருந்து கடத்திச் சென்ற 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடத்தப்பட்ட 10 மணி நேரத்தில் சிறுவனை மீட்ட காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை புளியந்தோப்பு கார்பரேஷன் போகிப்பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் துர்காதேவி தம்பதியின் 3 வயது மகன் அஜய். அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். சிறுவன் அஜய்யை அவரது தந்தை பிரகாஷ் நேற்று காலையில் பள்ளியில் விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார். அதன்பிறகு மாலையில் 2 பெண்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியை மேனகா என்பவரை அணுகியுள்ளனர். தங்களின் உறவுக்கார பையன் அஜய் என்றும் தங்களுடன் அனுப்புமாறும் ஆசிரியையிடம் கேட்டுள்ளனர். தாங்கள் இருவரும் அஜயின் அத்தை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆசிரியை மேனகா சிறுவனின் தாய் துர்கா தேவியிடம், இரண்டு பெண்கள் சிறுவன் அஜய்யை அழைத்துச் செல்ல வந்திருப்பதாக கூறி அவர்களுடன் அனுப்பலாமா..?  என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு அனுப்பியுள்ளார்.

ஆனால் அந்த இரண்டு பெண்களும் சிறுவன் அஜய்யை கடத்தி சென்று விட்டனர். சிறுவன் அஜய் கடத்தப்பட்டது தொடர்பாக பெற்றோர் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகார் தொடர்பாக விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் அதே பகுதியைச் சேர்ந்த குட்டியம்மாள், ஐஸ்வர்யா என்ற இரு பெண்கள் குழந்தையை கடத்திச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், பெண்களிடம் இருந்து சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்டதில் இருந்து 10 மணி நேரத்தில் சிறுவனை மீட்ட காவல்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.