மதுரை முகநூல்
தமிழ்நாடு

ரூ.2 கோடி கேட்டு சிறுவன் கடத்தல் விவகாரம்|கடத்தல் கும்பலில் முன்னாள் போலீஸ் - வெளியான பகீர் தகவல்!

PT WEB

மதுரையில் பள்ளிக்கு சென்ற 14 வயது சிறுவனை, ஆட்டோ ஓட்டுநருடன் கடத்திய வழக்கில், மேலும் மூவர் நெல்லையில் கைது. முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடியை தீவிரமாக தேடும் காவல்துறை - கடத்தலின் பின்புலத்தில் பெண் ஒருவருக்கு தொடர்பா எனவும் விசாரணை.

மதுரை மாநகர் எஸ்.எஸ்.காலனி விவேகானந்தர் தெரு பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்பவரின் 14 வயது மகன் மதுரை கீழமாத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் மாணவன் பள்ளிக்கு வழக்கமாக ஆட்டோவில் சென்றபோது அதனை பின்தொடர்ந்த ஆம்னி காரில் வந்த கும்பல் ஒன்று ஆட்டோ ஓட்டுனரை அரிவாளால் தாக்கிவிட்டு மாணவனையும் கண்ணை கட்டி துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்தி சென்றனர்.

செந்தில் குமார் -முன்னாள் காவலர்’

இதனையடுத்து, 2 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்டு கடத்தல் கும்பல் மிரட்டல்விடுத்து பேசியுள்ளனர். இதனையடுத்து ராஜலட்சுமி அந்த கும்பல் குறித்தும், பணம் கேட்டு மிரட்டிய ஆடியோவுடன் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் காசி தலைமையில் ஆட்டோ டிரைவரின் செல்போன் எண்ணை இடத்தை அறிந்து கடத்தல் கும்பலை பின் தொடர்ந்து காவல்துறையினர் தேடியபோது கடத்தல் கும்பல் கண்ணை கட்டிய படி மாணவன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகிய இருவரையும் செக்கானூரணி அருகே கின்னிமங்கலம் காட்டுப்பகுதிக்குள் இறக்கவிட்டு தப்பித்துள்ளனர்.

இதனையடுத்து கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய இருவரையும் காவல்துறையினர் அழைத்து வந்தனர்.

இதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கடத்தல் கும்பலை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை நேற்று காலை தேனி மாவட்டம் போடி பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கைது செய்யப்பட்ட செந்தில்குமார் காவல்துறையில் காவலராக பணியாற்றியவர் என்பதும் குற்ற வழக்குகள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை கடத்தல் நபர்கள்

கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை பிடிக்க 3க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், செந்தில்குமாரிடம் நடத்திய விசாரணையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் கடத்தலில் ஈடுபட்ட கடத்தல் கும்பலை சேர்ந்த நெல்லை ரஹ்மான் பேட்டையை சேர்ந்த அப்துல்காதர், தென்காசி சிவகிரி பகுதியில் உள்ள வீரமணி, காளிராஜ் ஆகிய மூவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணையில் மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அவருக்கு சொந்தமான காம்பளக்ஸை மாணவனின் தாயார் ராஜலெட்சுமியிடம் விற்பனை செய்த நிலையில், அதற்கான 1.5 கோடி ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பெண் தூண்டுதலின் பெயரில் தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் தலைமையில் கடத்தியிருக்கலாம் என தகவல் கூறப்படுகிறது.

இந்தக்கடத்தலில் மொத்தமாக 8 பேர் வரை தொடர்பு இருக்கலாம் என்பதால் விசாரணை அடிப்படையில் ஒவ்வொருவராக காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.