தமிழ்நாடு

பூந்தமல்லி: சாலை விபத்தில் கண்ணெதிரே சகோதரனை இழந்த சகோதரி; லாரி டிரைவரிடம் விசாரணை

நிவேதா ஜெகராஜா

பூந்தமல்லி அருகே அக்காவின் கண் எதிரே சாலை விபத்தில் தம்பி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தை சேர்ந்தவர் வர்ஷா (வயது 22). இவரது தம்பி வினய் (வயது 15), பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மொபட் ஒன்றில், பூந்தமல்லி அருகே உள்ள இவர்களுக்கு சொந்தமான நிலத்தை பார்ப்பதற்காக சென்றிருந்துள்ளனர். வர்ஷா மொபட்டை ஓட்டியுள்ளார்; வினய் பின்னால் உட்கார்ந்து வந்துள்ளார். இவர்கள் பூந்தமல்லி அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் செல்லும் போது எதிரே வந்த வாகனமொன்று, தங்கள் மொபெட் மீது மோதாமல் இருக்க வர்ஷா பிரேக் அடித்துள்ளார். இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் வினய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தனது கண்முன்னே தம்பி உயிரிழந்ததைக் கண்டு வர்ஷா கதறி அழுதது காண்போரையும் கண் கலங்க செய்வதாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வினய் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் மதனகோபாலை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.