தமிழ்நாடு

எஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை !

Rasus

எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் ஃபேஸ்புக் பக்கத்தில் இழிவான கருத்தை பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதேசமயம் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பலரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதியும் வழங்கியது.

இதனையடுத்து முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் எஸ்.வி.சேகர். அவரின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் எஸ்.வி.சேகரை கைது செய்ய இன்று வரை தடை விதித்திருந்தனர். இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் அவரை கைது செய்ய தடையில்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதுமட்டுமில்லாமல் விசாரணை நீதிமன்றமான எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகவும் எஸ்.வி.சேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து எஸ்.வி.சேகர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.