சிறைத்துறையின் விளக்கம் முகநூல்
தமிழ்நாடு

சவுக்கு சங்கர் மீது தாக்குதலா? எடப்பாடி பழனிசாமியின் கேள்வியும்! சிறைத்துறை கொடுத்த விளக்கமும்!

ஜெனிட்டா ரோஸ்லின்

சிறையில் யூட்டியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டார் என்ற செய்திகள் பரவிய நிலையில், இதற்கு கோவை மத்திய சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய விவகாரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார் சவுக்கு சங்கர். தொடர்ந்து, தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார், அவரை கோவைக்கு அழைத்துச் சென்றனர். பிணையில் வெளிவர முடியாத பிரிவுகள் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் செல்லும் வழியில், அவர் சென்ற வாகனம் விபத்துள்ளான நிலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,சிகிச்சை முடிந்தபிறகு கோவை மத்திய சிறைக்கு இவரை அழைத்து சென்ற காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனையடுத்து, இவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை சைபர் காவல்துறை மனு வழங்கியுள்ளது. இந்த நிலையில், சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் கடுமையாக காவலர்களால் தாக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் பரவிவருகிறது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தனது கண்டனத்தினை பதிவு செய்திருந்தார்.

அதில், “ சமூக ஊடக பத்திரிக்கையாளர் திரு. @SavukkuOfficial ஒரு சில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி கைதுசெய்துள்ளது காவல்துறை. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில், @SavukkuOfficial சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நல்ல நிலையில் சிறைக்கு சென்றார்.

இந்நிலையில் கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் எனவே மாண்புமிகு நீதிபதி ஒருவரே நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி மனு அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். பத்திரிக்கை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் விடியா திமுக அரசில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

மேலும், பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல திமுகவினர் மீது இந்த விடியா அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். சட்ட நடவடிக்கைகளும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.

சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பது என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”

சிறைத்துறையின் விளக்கம்

இந்நிலையில், இதற்கு விளக்கமளித்துள்ள சிறைத்துறை, ”கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை.” என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், காவலர்கள் தரப்பில் இருந்தும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், விரும்பதாக, தரக்குறைவான வார்த்தைகளால் சவுக்கு சங்கர் பேசியது தங்களை மிகவும் பாதித்துள்ளதாகவும், எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண் காவலர்கள் கவலை தெரிவித்து அறிக்கையை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.