தமிழ்நாடு

தற்காலிக செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு: முதலமைச்சர் உத்தரவு

Rasus

அரசு தற்காலிக செவிலியர்களுக்கு 7 ஆயிரத்து 700-ல் இருந்து 14 ஆயிரமாக ஊதியத்தை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 7 ஆயிரத்து 700 ரூபாய் ஊதியத்தில் தற்காலிக செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நிரந்தர செவிலியர் பணியிடங்கள் காலியாகும்போது, தற்காலிக செவிலியர்களே நிரந்தர செவிலியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறை நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. அதுவரை 7 ஆயிரத்து 700 என்ற தொகுப்பூதியத்திலேயே தொடர்ந்து பணியாற்றி வரும் தற்காலிக செவிலியர்களுக்கான ஊதியத்தை, 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஊதிய உயர்வானது கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படுமென்றும், இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 500 ரூபாய் வீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார். மேலும், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டங்களுக்கான தொகையும் செலுத்தப்படுமென்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் 12 ஆயிரம் செவிலியர்கள் பயனடைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.