School pt desk
தமிழ்நாடு

“நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை” - RTI ல் அதிர்ச்சி தகவல்

webteam

செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி பள்ளிகளில் உள்ள குறைகள் மற்றும் சிறத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள 18 குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன.

School

அதன் அடிப்படையில் பள்ளிகளில் உள்ள பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட 1,535 பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி மாரிசங்கர் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் கேள்வியெழுப்பி உள்ளார். அதற்கு முறையாக பதில் அளிக்காததால் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இரண்டாம் மேல்முறையீட்டில் விசாரணை, காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்டு, “இரண்டு வார காலத்திற்குள் உரிய தகவல்களை வழங்க வேண்டும். இல்லையென்றால் 25,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்” என மேல்முறையீட்டு ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்தச் சூழலில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 100 பள்ளி கட்டடங்கள் மோசமாக இருப்பதாகவும் மாற்றுக் கட்டடங்கள் தயார் செய்யாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

school students

மேலும்,

  • “மறு சீரமைப்பு செய்வதற்கு தமிழக அரசின் சார்பில் எந்த நீதியும் ஒதுக்கப்படவில்லை.

  • 100 பள்ளி கட்டடங்கள் மோசமாக இருக்கின்றன.

  • 159 கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன.

  • 144 கட்டடங்கள் தண்ணீர் வசதி இல்லாமல் இருக்கின்றன.

  • 81 கட்டடங்கள் குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் இருக்கின்றன.

  • மொத்தம் 193 கட்டடங்களில் சமையல் அறை மோசமாக இருக்கின்றன.

  • 263 பள்ளிகளுக்கு பேருந்து வசதிகள் தேவைப்படுகின்றன.

  • 665 பள்ளிகள் விளையாட்டு மைதானம் இல்லாமல் இருக்கின்றன.

  • 23 கட்டடங்கள் சுற்றுச்சுவர் மோசமான நிலையில் இருக்கின்றன”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவையாவும் ஆன்லைனில் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முடிவுகள் வெளியானது குறித்து மாரி சங்கர் கூறுகையில், “ஒரு வருட காலத்திற்கு பின் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் அளித்துள்ள அதிகாரிகள் தற்போதைய நிலை குறித்து தகவல் தெரிவிக்காதது, பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. கையில் ஆவணங்களை வைத்துக் கொண்டு அவர்கள் இப்ப்படி செய்யலாமா?

1,535 பள்ளிகள் தற்போது என்ன நிலைமையில் உள்ளது என்பதை மாவட்ட ஆட்சியர் மீண்டும் கள ஆய்வு செய்து உறுதி செய்தால் மட்டுமே மாணவர்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் பள்ளியை தொடரும் சூழல் இருக்கும்” என்றார்.

மாரி சங்கர்

மேலும் “மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஒரு குழு அமைத்து தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை விட வேண்டும்” என மாரி சங்கர் புதிய கடிதம் ஒன்றை வழங்கி உள்ளார்.

இதுகுறித்து நம்மிடையே பேசிய அவர், “மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் பள்ளியில் படிப்பது தற்போது அதிகாரிகள் கொடுத்துள்ள தகவலில் அம்பலமாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த பிரச்னையை கருத்தில் கொண்டு தற்போதைய நிலை குறித்த தகவல்களை வெளியிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.