தமிழ்நாடு

சரவணபவனில் அனாதையாக கிடந்த ரூ.25 லட்சம்!

சரவணபவனில் அனாதையாக கிடந்த ரூ.25 லட்சம்!

webteam

சென்னை அண்ணாநகரில் உணவருந்த வந்தவர்கள் விட்டுச்சென்ற 25 லட்சம் ரூபாயை உணவக நிர்வாகம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தது.

அண்ணாநகரில் உள்ள சரவணபவன் உணவகத்துக்கு நேற்று காலை 2 பேர் உணவருந்த வந்துள்ளனர். சாப்பிட்டுவிட்டுச் செல்லும் போது தாங்கள் கொண்டு வந்த பையை விட்டுச்சென்றுவிட்டனர். உணவுகளை பரிமாறிக்கொண்டிருந்த ரவி என்ற ஊழியர் கேட்பாரற்று, அனாதையாகக் கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அதில் பணம் இருந்ததால் மூத்த மேலாளர் லோகநாதனிடம் கொடுத்துள்ளார். பையில் 25 லட்சம் ரூபாய் பணம் இருப்பதை அறிந்த லோகநாதன் அதுகுறித்து உதவி பொதுமேலாளர் ‌பாலுவிடம் தெரிவித்துள்ளார். அவர் பணப்பை குறித்து அண்ணாநகர் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். பணப்பையை கேட்டு யாராவது வரலாம் என்பதால் பொறுத்திருக்கும்படி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் நேற்று முழுவதும் பணத்தை கேட்டு யாரும் வராததால் சரவணபவன் உதவி பொதுமேலாளர் பாலு இன்று காலை அதை அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணனிடம் ஒப்படைத்தார். சாப்பிட வந்தவர்கள் விட்டுச்சென்ற பணத்தை உணவக அதிகாரிகள் மூலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்த சரவணபவன் ஊழியர் ரவியை காவல்துறையினர் பாராட்டினர். 

ஏழ்மையான நிலையில் இருந்தாலும் நேர்மையாக செயல்பட்ட அவருக்கு பதவி உயர்வு வழங்கும்படியும் சரவணபவன் நிர்வாகத்துக்கு காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.