தெற்கு ரயில்வே புதியதலைமுறை
தமிழ்நாடு

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து ரூ.1.64 லட்சம் அபராதம் - தெற்கு ரயில்வே

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மத்திய ரயில்வே அமைச்சர் கடந்த வியாழக்கிழமை இந்திய ரயில்வே மண்டல பொது மேலாளர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யும் பயணிகள் பற்றி ரயில் மதாத் செயலியில் புகார்கள் அதிகமாக வருவது குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

madurai railway junction

மேலும் இதுபோன்ற புகார்களை தவிர்க்கவும் முன்பதிவு செய்த பயணிகள் இடையூறு இல்லாமல் பயணம் செய்யவும் அதிரடி சோதனைகள் நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை கோட்டத்தில் வைகை, குருவாயூர், பாலக்காடு - பழனி - சென்னை, தூத்துக்குடி - மைசூர் ரயில்களில் கடந்த ஐந்து நாட்களாக பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினார்.

இதில், உரிய பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூபாய் 1,64,415 வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணச்சீட்டு இல்லாமல் பய்ணித்தால் ரயில்வே சட்ட விதிகள்படி அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.