தமிழ்நாடு

டாஸ்மாக் கடையில் கத்தியுடன் அட்டகாசம் செய்த ரவுடி கும்பல்

webteam

அரக்கோணம் மார்க்கெட் பகுதியிலுள்ள அரசு மதுபானக்கடையில் விற்பனையாளர்களை மிரட்டிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மார்க்கெட் பகுதியில் மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த மதுபானக்கடை வியாபாரிகளுக்கு இடையூறாக இருந்ததால் அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் நீதிமன்றம் அந்தக்கடையை அப்புறப்படுத்த உத்தரவிட்டது.
அதன்படி அங்கிருந்த மதுபானக்கடை அப்புறப்படுத்தப்பட்டது.

ஆனால் அதே இடத்தில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மீண்டும் ஒரு மதுபானக்கடை திறக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த வணிகர்கள் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் டாஸ்மாக் மதுக்கடைக்கு வந்த ஏழுபேர் கொண்ட கும்பல் மது பாட்டில்களை இலவசமாகக் கேட்டுள்ளனர். மேலும் மதுபானத்தை தர மறுத்த டாஸ்மாக் ஊழியர்களை தாக்கவும் முயற்சித்துள்ளனர். டாஸ்மாக் கடை இரும்பு கேட் கொண்டு அமைக்கப்பட்டிருந்ததால் அவர்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை.

அதன்பின்னர் மதுபானக்கடையின் மீது அந்தக் கும்பல் கல்வீச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மார்க்கெட் பகுதியிலுள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்தக் கும்பலில் ஒருவர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கோகுல் என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.