தவெக தலைவர் விஜய் முகநூல்
தமிழ்நாடு

”தமிழ்நாட்டிற்கு தற்போது தேவை நல்ல தலைவர்கள்தான்!” - அனல் பறக்க உரையாற்றிய தவெக தலைவர் விஜய்!

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது விழா சிறப்புரை ஆற்றிய விஜய், ”நம்முடைய தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் உள்ளார்கள். ஆனால், நமக்கு தற்போது தேவையாக உள்ளது நல்ல தலைவர்கள் தான்.” என்று அனல்பறக்க உரை ஆற்றினார்.

2024 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகள் திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது விழா நடைபெறும் மண்டபத்திற்குள் ஊடகங்கள் வருவதற்கு முன்பாகவே இன்று காலை 5 மணி அளவில், வருகை தந்தார் விஜய். இதனைதொடர்ந்து, மக்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் விழா நடைப்பெறும் மண்டபத்திற்குள் வருகை தந்தார். வருகை தந்ததோடு மட்டுமல்லாமல், முதல் இருக்கையில் அமர்வதற்கு முன்னதாக, மக்களின் நடுவில் சென்று அமர்ந்து அவர்களை நலம் விசாரித்தார்.

இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக தற்போது அவர் உரையாற்றினார்.அதில்,

”நல்ல தலைவர்கள் தேவை”

”நம்முடைய தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் உள்ளார்கள். ஆனால், நமக்கு தற்போது தேவையாக உள்ளது நல்ல தலைவர்கள் தான்.

நான் தலைவர்கள் என்று சொல்வது தலைவர்கள் என்று சொல்வது அரசியல் மட்டுமல்ல. ஒவ்வொரு துறையிலும் நமக்கு தலைவர்கள் தேவை. எதிர்காலத்தில் அரசியலும் ஒரு விருப்பமாக இருக்க வேண்டும். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் தானே? ...” என்று பேசினார்.

“நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்”

பெற்றோர்களை விட நாம் அதிகமாக நேரம் செலவழிப்பது நண்பர்கள் மத்தியில் தான்; எனவே நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள் உங்களுடைய நட்பு வட்டாரத்தில் தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் அவர்களை நல்வழிப்படுத்த பாருங்கள்;

“தவறான பழக்க வழக்கம் கூடாது”

தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடாதீர்கள்.. ஈடுபடக்கூடாது; உங்களுடைய அடையாளத்தை எக்காரணம் கொண்டும் இழந்து விடாதீர்கள்.

“போதைப்பொருளை தடுப்பது அரசின் கடமை; அதேபோல்..”

போதைப் பொருளை தடுப்பது அரசின் கடமை; ஆனால், ஆளும் அரசு இதனை தவற விட்டு விட்டார்கள் என்பதை பற்றியும் நான் பேச வரவில்லை; அதற்கான மேடையும் இது இல்லை.

அரசாங்கத்தை விட நமது லைஃபை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்; நம்முடைய சுயக்கட்டுப்பாட்டை நான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.

இவரின் இந்த உரையானது,மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில்,கடந்த ஆண்டு நடிகராக கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய், தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவராக மாணவ மாணவிகளுக்களிடம் உரையாற்றியுள்ளார். ஆகவே, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும், 2 நாட்கள் நடைபெறும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், 750 விருதுகள் வழங்கப்பட உள்ளது. மேலும், இதில், 3500 மாணவ- மாணவிகளும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்க உள்ளனர். இதன் அடிப்படையில், விழாவிற்கு உள்ளரங்கு பாதுகாப்பிற்காக ஒரு உதவி ஆணையர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.