House pt desk
தமிழ்நாடு

அரியலூர்: ஓய்வு மின்வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகைகள் கொள்ளை

அரியலூர் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: வெ.செந்தில்குமார்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே நெல்லித்தோப்பு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராமலிங்கம் (75). இவர் மின்சாரத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் இவரது மனைவி தேன்மொழியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

House

இந்நிலையில் நெல்லித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் பத்திரிகை வைப்பதற்காக ராமலிங்கம் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததால் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த வெற்றிவேல் ராமலிங்கத்தை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்து பார்த்தபோது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றதும், வீட்டில் இருந்த பீரோவை உடைத்த அதில் வைத்திருந்த 33 பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீன்சுருட்டி போலீசார், விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.